’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, அரசின் திட்டங்களை கடைசி நிமிடம் வரை மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே, தினந்தோறும் குறைந்தது மூன்று முதல் நான்கு அரசு நிகழ்சியில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி, கட்சி நிகழ்வுகள், திமுகவின் சமூக வலைதள பிரச்சார முன்னெடுப்புகள் என தொடர்ச்சியாக அவர் பணியாற்றி வருகிறார்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் ?
இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்கவும் முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக இருப்பதால், கூட்டணியை இன்னும் பலமாக்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக வியூக வகுப்பு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கு பணிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.
தொதி பங்கீடு எப்போது ?
அதோடு, கூட்டணியில் இருக்கும் கட்சிகள் மற்றும் புதிதாக திமுக கூட்டணிக்குள் வரவிருக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய தேவை திமுகவிற்கு இருக்கிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கும் நிலையில், இதுவரை திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படவில்லை. அதற்கு காரணம், திமுக இன்னும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருப்பதே. ஆனால், ஏற்கனவே தொகுதி பங்கீட்டு குழுவில் யார், யாரை நியமிக்கவேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டது. கூட்டணி இறுதி செய்யப்படும் நிலையில், அந்த அறிவிப்பும் வெகு விரைவில் வரவிருக்கிறது. கடந்த தேர்தலைகளை பார்த்தாலும் திமுகவில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்ட பின்னரே, தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்படும் என அறிவாலய வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.
பிப்ரவரி இறுதிக்குள் அனைத்தையும் முடிக்க திமுக முடிவு
இந்நிலையில், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கூட்டணிக்கான முடிவுகள், தொகுதி பங்கீடு என அனைத்தையும் முடித்துவிட திமுக தலைமை திட்டமிட்டிருக்கிறது. அதனால், அதற்கான பணிகள் திமுக தலைமையால் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. கூடுதல் தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சமாதானப்படுத்தும் படலமும் தொடங்கியிருக்கிறது.
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு
பிப்ரவரி இறுதியில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு முடிவுகள் என அனைத்தும் எடுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்ததினமான மார்ச் 1ல் முக்கிய அறிவிப்பு ஒன்றை திமுக வெளியிட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்?
கூட்டணி இறுதிச் செய்யப்பட்டு, தொகுதி பங்கீட்டை முடித்த பின்னர், மார்ச் 2வது வாரம் அல்லது மார்ச் 8ஆம் தேதி திருச்சி அல்லது மதுரையில் கூட்டணி கட்சித் தலைவர்களை வைத்து பிரம்மாண்ட மாநாடு நடத்த திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.