தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்டு கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், அடுத்த 3 நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
தமிழக சட்ட மன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இறுதிகட்ட தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதியும், மதிமுகவிற்கு 4 தொகுதியும், கொ.ம.தே.க, ஐ.யு.எம்.எல், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருப்பினும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள், மா.கம்யூனிஸ்ட், மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறியானது நீடித்து வருகிறது.
கூடுதல் தொகுதி- கூட்டணி கட்சிகள் பிடிவாதம்
அதிலும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2முதல் 3 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தி வருகிறது. ஆனால் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்தக்கட்ட முடிவு தொடர்பாக ஆலோசிக்க இன்று அவரச செயற்குழு கூட்டத்தை அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் எடுக்கப்படவுள்ள முடிவை பொறுத்து கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது.
சிபிஎம் நிலை என்ன.?
இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் கடந்த முறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கு பதிலாக 5 தொகுதியை ஒதுக்க திமுக முன்வந்துள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்ய்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதியை விட கூடுதலாக ஒதுக்க வேண்டும் என விடாப்பிடியாக உள்ளது. இதனால் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது. வருகிற 23ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 5 தொகுதிய ஏற்றுக்கொள்வதா.? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுவதா.? என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படவுள்ளது.
இரட்டை இலக்கத்தில் தொகுதி- விசிக
இதே போல விடுதலை சிறுத்தைகள் கட்சியுடனான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் 2ஆம் தேதி தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. அப்போது விடுதலை சிறுத்தை கட்சிக்கு 12 தொகுதிகளை ஒதுக்குமாறு பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவோ கடந்தமுறை ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால் இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக தரப்பு தற்போது வரை அழைக்கவில்லை. அதே நேரம் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை 2 முறை வீட்டில் சென்று திருமாவளவன் சந்தித்தார். அப்போதும் கூடுதல் தொகுதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையானது நீடித்து வருகிறது.
திங்கட்கிழமைக்குள் இறுதி முடிவு
கடைசியாக திமுக தரப்பில் 7 தொகுதிகள் வரை தருவதற்கு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல புதுச்சேரியிலும் 2 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் நிலையில் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. இதனால் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலை நீடித்து வருகிறது. எனவே வருகிற திங்கட்கிழமைக்குள் தொகுதி ஒப்பந்தத்தை முடிக்க திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அடுத்த 3 நாட்களுக்குள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவாலய வட்டார தகவலாக உள்ளது.