மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் ராணுவ தளங்கள் அமைந்துள்ள டியாகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஈரான் இன்று, இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ராணுவத் தளமான டியாகோ கார்சியா மீது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக துபாயில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.
4,000 கிமீ தூரத்திற்கு ஏவுகணையை ஏவி மிரட்டிய ஈரான்
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு அறிக்கையின்படி, ஈரானியப் பகுதியிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தளத்தின் மீது, இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே இதுதான் மிகப்பெரிய மற்றும் மிகவும் அரிதான தாக்குல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகளும் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரிகள் கூறுவது என்ன.?
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு ஏவுகணை நடுவானில் செயலிழந்ததாகவும், மற்றொன்று அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இடைமறிப்பு ஏவுகணையால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாகோஸ் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள டியாகோ கார்சியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவத் தளமாகும்.
நிபுணர்களின் நினைப்புகளை பொய்யாக்கிய ஈரான்
டீகோ கார்சியாவை ஈரான் குறிவைத்திருப்பது, ராணுவ நிபுணர்களிடையே கவலைகளை எழுப்பியுள்ளது. இதுவரை, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் வரம்பு குறைவாகவே இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் 4,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தாக்குதல் நடத்த முயன்றிருப்பது, ஐரோப்பாவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறனை டெஹ்ரான் இப்போது பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. பென்டகன் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. ஆனால், இது போரின் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டது என்று நம்பப்படுகிறது.
ஈரானின் தெளிவான செய்தி – முன்னாள் மத்திய அமைச்சர்
ஈரான் உண்மையிலேயே டீகோ கார்சியாவைத் தாக்க முயன்றிருந்தால், அது போரின் வீச்சை கணிசமாக விரிவுபடுத்தியிருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். மேலும், மத்திய கிழக்குக்கு அப்பாலும், இன்னும் தெற்கேயும் கூட தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்ற தெளிவான செய்தியை ஈரான் மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமரை விமர்சித்த அப்பாஸ் அராக்சி
முன்னதாக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைக் கடுமையாக விமர்சித்தார். ஸ்டார்மர் தனது சொந்த மக்களின் விருப்பங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்காக பிரிட்டிஷ் தளங்களை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் அவர் கூறினார். இது பிரிட்டிஷ் குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், ஈரான் தனது தற்காப்பு உரிமையை பயன்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார். பிரிட்டனின் இந்த நடவடிக்கை தங்களை நேரடியாகப் போருக்குள் இழுத்துச் செல்வதாக ஈரான் நம்புகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, இந்தியப் பெருங்கடல் பகுதியில், இலங்கைக்குத் தெற்கே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை நீர்மூழ்கி ஏவுகணையால் மூழ்கடித்ததில், 85-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தியா நடத்திய மிலன் 2026 என்ற பலதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பல் அது என்பது குறிப்பிடத்தக்கது.