கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என தகவல் பரவியது.
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் அடுத்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிலிண்டர் தட்டுப்பாடு
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. போர் நடந்து வருவதால் கடல் வழிப் போக்குவரத்து ஈரான் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் எரிவாயு நிரப்பப்பட்ட கப்பல்கள் அங்காங்கே நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட சிலிண்டர் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உறுதி செய்துள்ளனர். மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் குழு அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முடங்கும் தொழில்கள்
கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி எண்ணற்ற தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவை யாவும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஹோட்டல்களுக்கு விநியோகம் செய்யப்படும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் உணவு வகைகளை குறைத்தும், சில இடங்களில் முழுவதுமாக ஹோட்டல்கள் மூடப்பட்டும் காணப்படுகின்றன. சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த தகவல் வெளியான நிலையில் பெரும்பாலான குடும்பத்தினர் முன்பதிவு செய்ய சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்ஸியை தொடர்பு கொண்டு வரும் நிலையில் அவர்களின் இணைப்புகள் முடங்கியுள்ளது.
இதனைக் கண்டு மீண்டும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட சூழலுக்கு நாம் தள்ளப்படுவோமோ என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டுக்கு விநியோகம் செய்யும் சமையல் எரிவாயு சிலிண்டரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பயப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பான பிரச்னைகள் சரி செய்யப்படும் என திருச்சியில் பேசிய பிரதமர் மோடியும் உறுதியளித்துள்ளார்.
அடுத்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?
இப்படியான நிலையில் கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என தகவல் பரவியதால் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. விடிய விடிய காத்திருந்து தங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். ஆனால் போதுமான அளவு பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் கையிருப்பில் இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.