சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து தோற்ற பின் இந்த பக்கமே வரவில்லை.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதை கார்த்தி சிதம்பரம் எம்.பி., கடுமையாக விமர்சித்துள்ளார்.
காரைக்குடியில் களமிறங்கிய சீமான்
ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வழக்கம்போல இந்த முறையும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. 117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்கள், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் என 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். சிவகங்கை மாவட்டம் சீமானின் சொந்த ஊர் என்பதால் அங்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விமர்சித்த கார்த்தி சிதம்பரம்
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் சீமானை சரமாரியாக விமர்சித்தார். அதன்படி, “சீமானுக்கும் இந்த தொகுதிக்கும் சம்பந்தம் கிடையாது. அவர் இந்த பகுதியில் வசிப்பவர் இல்லை. சீமானுக்கு காரைக்குடியில் ஓட்டும் கிடையாது. அவர் இங்கு வந்தால் ஹோட்டலில் தான் தங்க வேண்டும். எப்போதும் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு தொகுதியிலும் புதுப்புது வேட்பாளர்களை நிறுத்துவது அவர்களது பழக்கமாகும். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் இருந்து வந்த எழிலரசி என்பவரை சீமான் இங்கு வேட்பாளராக நிறுத்தினார். நான் அவர்களை ஒருமுறை தான் பார்த்தேன். அந்த எழிலரசி தேர்தலில் தோற்று போனார். அதன்பிறகு அந்த பெண் இந்த ஊரில் வந்து எதுவும் சேவை செய்யவில்லை.
இதனிடையே சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ம் ஆண்டு தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து தோற்ற பின் இந்த பக்கமே வரவில்லை. இது எல்லாரும் பேசும் வசனம் தான். தொகுதிக்கு சம்பந்தப்பட்டவர்கள் தான் தோற்றாலும் ஜெயித்தாலும் தொகுதிக்குள் இருப்பார்கள்.
அதனால் சீமான் இந்த தேர்தலில் தோற்றால் காரைக்குடி பக்கம் கட்சி நிகழ்ச்சி தவிர எதற்கும் வரமாட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பல்வேறு வேட்பாளர்கள் தற்போது அந்த கட்சியில் கூட இல்லை. புது வேட்பாளர்களை போட்டு விட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என சொல்வார்கள். இந்த தொகுதிக்கும் சீமானுக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு காரைக்குடி மக்கள் நன்கு விருந்தோம்பல் செய்து அனுப்புவார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்.பி., தெரிவித்துள்ளார். சீமான் கடந்த முறை சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.