ஆந்திராவில் காலியாக உள்ள 4 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகளில் ஒரு பதவியை அண்ணாமலைக்கு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.
தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை. தலைவர் பதவியில் இருந்து இவர் மாற்றப்பட்டது முதலே பெரியளவு பிரதிநிதித்துவம் இல்லாமலே இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தனது தந்தையின் உடல்நலத்தை காரணம் காட்டி அவரும் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
ஆந்திராவில் காலியாகும் 4 ராஜ்யசபா எம்பி:
இந்த சூழலில், அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு தித்திக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. வரும் ஜுன் 21ம் தேதியுடன் 3 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள், ஒரு தெலுங்கு தேசம் எம்பி என மொத்தம் 4 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆந்திராவில் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியும் தெலுங்கு தேசம் கட்சி வசமே செல்கிறது. இதையடுத்து, 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை தெலுங்கு தேசம் கட்சியே வைத்துக்கொண்டு, மற்ற 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
அண்ணாமலைக்கு எம்பி பதவி?
பாஜக-விற்கு வழங்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அண்ணாமலைக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடாதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இதனால், அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சிவிக்கும் வகையிலும், அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கும் வகையிலும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக-விற்கு அந்த எம்பி சீட்டை தெலுங்கு தேசம் வழங்கினாலும், ஆந்திர பாஜக நிர்வாகிகள் அந்த எம்பி சீட்டை அண்ணாமலைக்கு தர ஒப்புக்கொள்வார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அண்ணாமலை தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய இடங்களிலும் பாஜக-விற்கு ஆதரவாக கடந்த தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டாபோட்டி:
தெலுங்கு தேசம் கட்சி சார்பின் சார்பில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒரு பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷின் நண்பர் சனா சதீஷிற்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற ஒரு பதவியை பெறுவதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இடையே மல்லுகட்டு நடந்து வருகிறது. அதேபோல, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் எம்பி பதவியை கைப்பற்ற கடும் போட்டி நடந்து வருகிறது.