சென்னை
அண்ணா சாலையில் இன்று காலை 10 மணியளவில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக, அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்
அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் உள்ள யூனியன் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதேபோல், அண்ணாநகரிலும் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால், ஊழியர்கள் வெளியேறினர். மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
ஆனால், நில அதிர்வு ஏற்படும் வகையில் அங்கே பணி நடைபெறவில்லை எனவும் மெட்ரோ அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,” சென்னையில் நில அதிர்வு ஏதேனும் பதிவாகி உள்ளதாக என டெல்லியில் உள்ள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தில் கேட்கப்பட்டுள்ளது. இதுவரை அத்தகைய தகவல்கள் எதுவும் அந்த மையத்தில் இருந்து கிடைக்கப்பெறவில்லை” என கூறியுள்ளார்.