திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கோண சீமா டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நளமதி அப்புலு சவுத்ரி. இவரது மகள் லீலா பவித்ரா (வயது 28). மகளின் படிப்புக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நளமதி அப்புலு சவுத்ரி கோண சீமாவிலிருந்த சொந்த வீடு, நிலங்களை விட்டுவிட்டு காக்கிநாடாவிற்கு குடிபெயர்ந்தனர்.![]()
காக்கிநாடாவில் உள்ள ஜெகன்நாதபுரம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து மகளை பள்ளி படிப்பு முதல் கல்லூரி வரை படிக்க வைத்தனர். விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் லீலா பவித்ரா எம்.எஸ்.சி படித்தார். அதே கல்லூரியில், ஸ்ரீகாக்குளம் மாவட்டம், நரசன்னபேட்டை, வெள்ளி வலசை பகுதியை சேர்ந்த தினகர் (வயது 29) என்பவரும் படித்து வந்தார். தினகர், லீலா பவித்ரா நண்பர்களாக பழகினர். பின்னர் காதலர்களாக மாறினர்.
கல்லூரி படிப்பை முடித்த லீலா பவித்ரா கர்நாடகா மாநிலம் பெங்களூரு பழைய ஏர்போர்ட் ரோடு, முருகேஷ் பாளையத்தில் உள்ள ஒமேகா ஹெல்த் கேர் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதேபோல் அங்குள்ள தொம்மலூரில் லூசிஸ் ஹெல்த் கேர் நிறுவனத்தில் தினகர் வேலை செய்து வந்தார்.
கல்லூரி படிப்பை முடித்த பிறகும் இருவரும் அருகருகே வேலை செய்து வந்ததால் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் லீலா பவித்ரா வீட்டிற்கு தெரியவந்தது. தினகர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு லீலா பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து காதலை கைவிடுமாறு கண்டித்தனர்.
பெற்றோர் கண்டித்ததால் லீலா பவித்ரா தினகரனுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். காதலியுடன் பழகி பேச முடியாமல் தினகரன் விரக்தி அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லீலா பவித்ரா வேலை முடித்து நிறுவனத்தில் இருந்து வெளியே வந்தார்.
காதலிக்காக வெளியே காத்திருந்த தினகர், லீலா பவித்ரா வெளியே வந்தவுடன் தனியாக பேச வேண்டும் என மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றார். கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நாம் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என லீலா பவித்ராவிடம் தெரிவித்தார். அதற்கு அவர் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்தார்.
இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தினகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லீலா பவித்ராவின் உடலில் 16 இடங்களில் சரமாரியாக குத்தினார். லீலா பவித்ரா வலியால் அலறி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
பின்னர் லீலா பவித்ரா பிணத்தின் அருகே தினகர் கத்தியுடன் அருகே சோகமாக அமர்ந்து கொண்டார். இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த எஸ் வந்த புரா போலீசார் இளம்பெண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தினகரை கைது செய்தனர். இதுகுறித்து வேலா பவித்ராவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த அவரது பெற்றோர் லீலா பவித்ராவின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.
அப்போது லீலா பவித்ராவின் தாயார் கூறுகையில்:-
கடந்த ஞாயிற்றுக்கிழமை போன் செய்த மகள் தினகர் என்பவர் சைக்கோவாக மாறி என்னை பயமுறுத்துகிறார். அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என பயமாக உள்ளது என தெரிவித்தார். நாங்கள் வேண்டுமானால் துணைக்கு வருகிறோம் என்று தெரிவித்த போது வேண்டாம் என கூறிவிட்டார். தற்போது எனது மகளை சைக்கோ தினகர் வெறித்தனமாக குத்தி கொலை செய்து விட்டார் எனக் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.