தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டபேரவை நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன், இதுவரை இல்லாத அளவிற்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது, அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்தும் அதிமுக வெளிநடப்பு செய்ததாக விளக்கம் அளித்தார். மேலும், மூன்று முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான், மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு என்றும் விமர்சித்தார்.
மக்களை ஏமாற்றும் நிதி நிலை அறிக்கை இது, இந்த நிதிநிலை அறிக்கையை ஒரு மின் மினி பூச்சாக பார்ப்பதாகவும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது எவ்வித வெளிச்சத்தையும் தராது என தெரிவித்தார்.
அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது தகுதியின் அடிப்படையில் வழங்குவதாக கூறுகிறார்கள். எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.
வரி வருவாய் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இல்லாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், சட்டபோராட்டங்கள் நடத்துவதுதான் நீட் தேர்வு ரகசியமா, நாங்கள் அதை செய்யவில்லையா, நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.