பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி அன்றைய தினம் ‘டிரோன்’கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னைக்கு 8-ந்தேதி மதியம் 3 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனைய கட்டிடத்தின் முதல் பகுதியை செயல்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் விமான நிலையத்தின் பயணிகள் சேவைத்திறன் ஆண்டுக்கு 2.3 கோடியில் இருந்து 3 கோடியாக அதிகரிக்கும்.இந்த புதிய முனையம் பாரம்பரிய அம்சங்களை கொண்ட தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதை பார்வையிட்டு முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் மெரினா கடற்கரை நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐ.என்.எஸ். அடையாறு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சென்று சென்னை-கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தாம்பரம்-செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம் பள்ளி ரெயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார். மேலும் நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இதன்பிறகு கார் மூலம் மயிலாப்பூர் சென்று, ராமகிருஷ்ண மடத்தின் 125-ம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் காரில் புறப்படும் பிரதமர் மாலை 5.55 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி மாலை 6.30 மணிக்கு பல்லாவரம் அல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை 785-ஐ தொடங்கி வைக்கிறார். மேலும் ரூ.2400 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை 747-ல் சாலை திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்று பேசுகிறார்.
அன்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் மைசூர் புறப்பட்டு செல்கிறார். மறுநாள் காலை (ஞாயிறு) 9 மணிக்கு நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாம் செல்கிறார். அங்கு உள்ள யானை பாகன்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு அங்கிருந்து மீண்டும் மைசூர் செல்கிறார். பிரமர் மோடி 8-ந்தேதி மதியம் முதல் இரவு வரை சென்னையில் இருப்பதால் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அன்றைய தினம் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இப்போதே கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி கார் செல்லும் சாலையில் 5 அடிக்கு ஒரு போலீசார் என்ற வகையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். 30 நிமிடத்துக்கு ஒரு முறை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பிரதமர் செல்லும் சாலையை சோதனையிடுவார்கள். பிரதமரின் கார் செல்லும் சாலைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் கடைகளை மூடும்படியும் போலீசார் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தனியாக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சென்னை போலீசாருடன் தாம்பரம், ஆவடி மாநகர காவல்துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே முதுமலைக்கு பிரதமர் வருவதையொட்டி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று முதுமலைக்கு வந்தனர். அவர்கள் முதுமலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் மசினகுடியில் அமைக்கப்பட்டு வரும் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சுதாகர் தலைமையில், டி.ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் 7 எஸ்.பிக்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் முதுமலை மற்றும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து போலீசார் நீலகிரி மாவட்டத்திற்கு வர உள்ளனர். பிரதமர் பங்கேற்கும் பகுதியில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடி, அடர்ந்த வனப்பகுதி, மலையேற்றம் செல்லும் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முதுமலை வனப்பகுதி என்பதால் அதிவிரைவுப்படை போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை முதுமலை புலிகள் காப்பகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டது. மேலும் அங்குள்ள விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளை வனத்திற்குள் அழைத்து செல்லும் வாகன சவாரியும் நிறுத்தப்பட்டது.