ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம்

திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் இலவச தரிசனத்திற்காக 30 முதல் 40 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.
ஒவ்வொரு நாளும் 80,000 பக்தர்கள் தற்போது ஏழுமலையானை வழிபடுகின்றனர். இந்த நிலையில் இலவச தரிசனத்திற்காக நாள் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் வசதிக்காக இன்று முதல் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் சுப்ரபாத சேவையில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி கிடையாது.
இதன் மூலம் அதிகாலை துவங்கி சுமார் 4 மணி நேரம் கூடுதலாக பக்தர்களை இலவச தரிசனத்திற்காக அனுமதிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கூடுதலாக 22 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை வழிபடலாம் என தேவஸ்தானம் கூறியுள்ளது. அதேபோல் வியாழக் கிழமைகளில் திருப்பாவாடை சேவையில் கலந்து கொள்ள ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம். எனவே வியாழக்கிழமைகளில் கூடுதலாக சுமார் 2000 பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை வழிபடலாம் என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.