ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. அதனால், சென்னை- குஜராத் இடையேயான இறுதிப் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
16-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.
இந்தப் போட்டியைக் காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஆனால், மாலை முதலே மழை பெய்துவந்ததால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஓவர்களைக் குறைத்தாவது போட்டி நடைபெறுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விட்டு விட்டு மழை தொடர்ந்தது. இதனால், போட்டியை ஒத்திவைப்பதாக இரவு 11 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
ஐபிஎல் தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் டே-வான இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஏற்கனவே பெற்ற டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி நேரில் கண்டுகளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரிய திரைகளில் இறுதிப்போட்டியை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆர்வமுடன் வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எனினும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று 5-வது முறையாக கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இன்றும் மழை பெய்து, போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இதுவரையான புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்பது ஐபிஎல் விதியாகும்.
இதனிடையே, இன்றைய இறுதிப்போட்டியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வுபெறப் போவதாக சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சென்னை மற்றும் மும்பை அணிகளுக்காக இதுவரை 204 போட்டிகளில் விளையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகவும், ஓய்வுபெறும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார்.