சேலம்:
சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி. இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது.
இதனை வழக்கமாக கொள்முதல் செய்யும் நிறுவனம் என நம்பி இமெயிலில் தெரிவித்திருந்த கல்ப் ஸ்டீல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அபுதாபி பெயரிலான போலி நிறுவன வங்கி கணக்குக்கு 71.93 லட்சம் ரூபாயை செலுத்தினார். பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து அவர் விசாரித்தபோது தான் போலி இமெயில் மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
தொடர்ந்து அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டது அபுதாபி நிறுவனமா? அல்லது வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? என்பது குறித்து அந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.