வேலூர் காட்பாடி, காந்தி நகரில் திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் திடீரென சென்னையில் இருந்து 4 வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்த முயன்றனர்.
துரைமுருகனின் மகன் எம்.பி கதிர் ஆனந்தும் அமைச்சருடன் ஒன்றாக தங்கி இருப்பதால் அவரது அறைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டிருந்தனர். அமைச்சர் துரை முருகன் மற்றும் எம்.பி. கதிர் ஆனந்த் இருவருமே வீட்டில் இல்லை. வேலையாட்கள் மட்டுமே இருந்தனர். அதனால் அதிகாரிகள் வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தனர்.ஆளில்லாத வீட்டில் சோதனை எப்படி நடத்துவது என அவர்களுக்குள் ஆலோசனை நடத்தினர். பின்னர் இதுகுறித்து கதிர் ஆனந்த் எம்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டில் உள்ள கதிர் ஆனந்த், இங்கு உள்ள முக்கியமான கட்சி பிரமுகர்களுடன் போனில் பேசியதாகவும், உறவினர்கள் முன்னிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி கொள்ள ஒத்துழைப்பதாகவும் கூறியதாக தகவல் வெளியானது.இதையடுத்து பூட்டப்பட்ட கதவை மதியம் 2 மணிக்கு மேல் திறந்து உள்ளே சென்ற அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கதிர் ஆனந்த் வீட்டிற்கு வெளியே குவிந்ததால் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎஃப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிறிஸ்டியன் பேட்டை பகுதியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் காலை 7 மணி முதலே சோதனை நடைபெற்றது. இரவுக்கு மேல் உள்ளே சில பூட்டப்பட்ட லாக்கர்களை உடைத்து சோதனை செய்ததாகத் தெரிகிறது. இதையடுத்து கல்லூரி வளாகத்திற்கு வங்கி அதிகாரிகள் அடங்கிய வாகனம் ஒன்று உள்ளே சென்றுள்ளது. உள்ளே பணம் கைப்பற்றப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். காட்பாடி அடுத்த நடுமோட்டூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அதிகாலையில் இருந்தே பலத்த பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வந்தது. சீனிவாசன் வீட்டில் 4 மணியளவில் சோதனையை முடித்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கையில் டிராவல் பேக்குகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.அந்த பையில் சுமார் 25 லட்சத்திற்கு மேல் ரொக்கப்பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே இரவு 7.30 மணியளவில் கதிர் ஆனந்த் வீட்டுக்குள் பணியாளர் ஒருவர் கடப்பாறையுடன் சென்றுள்ளார். உள்ளே கட்டையால் செய்யப்பட்ட பெட்டி மற்றும் திறக்க முடியாத பீரோவை உடைப்பதற்காக அதிகாரிகள் கடப்பாறையை எடுத்து வரச் சொன்னதாக அப்போது பணியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் முன்னிலையில், சில பெட்டிகள் உடைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. சோதனைக்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் 10 லட்சம் வருமான வரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதே வருடம் பூஞ்சோலை சீனிவாசன் தொழிற்சாலையில் இருந்து வேட்பாளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தான் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர்களை சந்தித்து முடித்த பின், தலைமை செயலகத்திற்கு சென்று முதலமைச்சரை சந்தித்துள்ளார். பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காட்பாடி வீட்டில் யார் வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அந்த வீட்டில் யாரும் இல்லை. இந்த சோதனை தொடர்பாக உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ? அதே அளவிற்கு தான் எனக்கும் தெரியும்” என்று கூறினார்.இந்த அதிரடி சோதனையால் வேலூர் மாவட்டம் காட்பாடியில் பெரும் பரபரப்பு நீடித்தது. இதையடுத்து, 25 பேர் அடங்கிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் அதிரடி சோதனையை முடித்துக் கொண்டு பணம் மற்றும், ஆவணங்களுடன் சென்றதாகத் தெரிகிறது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து முழுமையான தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.