இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசிக்க தொடங்கிவிட்டீர்களா? நீங்கள் எப்போதும் வித்தியாசமான சுவையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சமைத்து கொடுக்க விரும்புவீர்களா?
உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அந்த சேனைக்கிழங்கைக் கொண்டு கொங்குநாடு ஸ்டைலில் ஒரு மசாலா செய்யுங்கள். இந்த சேனைக்கிழங்கு மசாலா சாதத்திற்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேனைக்கிழங்கு – 250 கிராம்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு…
* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 2 துண்டு
* கிராம்பு – 2
* பூண்டு – 6 பல்
* இஞ்சி – 1 இன்ச் (நறுக்கியது)
* வரமிளகாய் – 5
* சோம்பு – 1 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* கசகசா – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
தாளிப்பதற்கு…
* கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கை போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5-7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சேனைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து, நன்கு வதக்கி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய், கசகசா, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதை மிக்சர் ஜாரில் போட்டு, நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலா மற்றும் வதக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, மசாலா நன்கு சேனைக்கிழங்குடன் சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா தயார்.