இம்பால்:
வடகிழக்கு இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது மணிப்பூர் மாணவர் மற்றும் மாணவியின் படுகொலைகள். பள்ளி சிறுவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து கொடூரமாக கொலை செய்த துயரத்துக்கு நீதி கோரி மணிப்பூர் மக்கள் விடிய விடிய போராட்டத்தை நடத்தினர்.
மணிப்பூரில் மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே மே மாதம் முதல் தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. மணிப்பூரில் வரலாறு காணாத வன்முறைகள் தொடர்ந்தன. இந்த வன்முறைகளில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையும் நாசமானது. மணிப்பூரில் அண்மையில்தான் இணையசேவை இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் மணிப்பூரில் இயல்பு நிலைமை திரும்பும் என்ற நம்பிக்கை இருந்தது.
மாணவன், மாணவி கொடூர படுகொலை:
ஆனால் மணிப்பூரில் குக்கி இன பயங்கரவாதிகள் இரு மைத்தேயி இன மாணவர்களை படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மீண்டும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிட்டது. இத்தனைக்கும் பள்ளிக் கூட மாணவர்கள்தான் அவர்கள். அந்த பிஞ்சு உள்ளங்களை கடத்திச் சென்று வாயில் துணியை கட்டி மணியிட வைத்தும் கொடூரமாக சித்ரவதை செய்தும் படுகொலை செய்திருக்கிறது குக்கி பயங்கரவாத கும்பல். படுகொலையான மாணவன், மாணவியின் பெற்றோர் தெரிவிக்கும் தகவல்கள் நெஞ்சை உலுக்கி எடுக்கிறது.
என்ன பாவம் செய்தனர்? :
படுகொலை செய்யப்பட்ட மாணவனின் தந்தை Phijam Ibungobi டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகனோ, மகளோ அல்லது வேறு ஒருவர் மகனோ, மகளோ அவர்கள் என்ன பாவம்தான் செய்தார்கள்? அவர்கள் யாருக்கு என்ன தீங்கு செய்தார்கள்? அவர்களை ஏன் கடத்திச் சென்று படுகொலை செய்ய வேண்டும்? என் மகன் ஜூலை 6-ந் தேதி கடத்தப்பட்டார். அன்று முதல் அவன் வருவான் என காத்திருந்தோம்.. அவனுக்கான உணவுகளை மேஜை மீது வைத்து காத்திருந்தோம்.. இப்போது உயிரற்ற சடலமாக எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். இந்த துயரத்தை எப்படி நாங்கள் ஏற்பது? . இவ்வாறு மாணவனின் தந்தை Phijam Ibungobi தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு பயிற்சிக்கு சென்ற மாணவி..:
படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயார் ஜெயஸ்ரீ கூறியதாவது: ஜூலை 6-ந் தேதியன்று நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்துக்கு என் மகள் சென்றாள். அப்போதுதான் ஊரடங்கும் தளர்த்தப்பட்டிருந்தது. அவளுடைய சக மாணவர் ஒருவர்தான் அவளை இரு சக்கரவாகனத்தில் அழைத்துச் சென்றார். வெகுநேரமாகியும் என் மகள் வீடு திரும்பவில்லை. அவளுக்கு செல்போனில் அழைத்தேன். அவள் போன் எடுக்கப்படவில்லை. அவளை நம்போல் என்ற இடத்தில் பார்த்ததாகவும் சிலர் சொன்னார்கள். அவள் எதற்கு நம்போல் பகுதிக்கு போனாள் என்கிற குழப்பம் இருந்தது. ஆனால் என் மகளின் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. இப்போது சடலமாக என் மகள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள்.. அவள் வனப்பகுதியில் சித்ரவதை செய்யப்பட்ட படங்களைப் பார்க்கும் போது நெஞ்சம் வெடித்துப் போகிறது. இவ்வாறு மாணவியின் தாயார் ஜெயஸ்ரீ கூறினார்.
மாணவியின் தந்தை:
மேலும் எங்களுக்கு தேவை இப்போது நீதிதான்.. எங்கள் மகளையும் அந்த மாணவனையும் கொடூரமாக படுகொலை செய்த பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் வேதனைக் குரல். இத்தனை நாளும் எத்தனை துயரங்களுடன் கடத்தி இருப்பேன் என்கிற வலி எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்றார் மாணவியின் தந்தை ஹிஜாம் குல்லாஜித்