இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் இண்டியா கூட்டணியின் கூட்டத்திற்காக டெல்லி சென்ற முதலமைச்சர்.. பிரதமருடனான சந்திப்பில் நேரம் மாற்றம்!
வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே டெல்லி சென்ற முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை திமுக எம்பிக்கள் அளித்தனர். முன்னதாக தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் நாளை இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு இடையே மதியம் 12 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தது. பின்னர் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.