சென்னை:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலங்களாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் புதுக்கோட்டையில் மணல் குவாரிகளை நடத்தி வரும் அதிபர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதேபோல் மின்வாரியத்திற்கு உபகரணங்களை விநியோகிக்கும் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை செய்திருந்தது.
இந்நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு ஐடி அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி ஆகிய பகுதிகளில் உள்ள மென்பொருள் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்பட்டது.
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் கடலூர் சாலையில் தனியார் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை ஒன்று சேர்த்து கம்ப்யூட்டர் தயார் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று காலை 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டாம் நாளாக இன்றும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஃபிளக்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை, ஸ்ரீபெரும்புதூர் புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.