புதுடெல்லி:
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா 2-வது இடத்திலும் இருக்கிறது. ஜப்பான் 3-வது இடத்திலும், ஜெர்மனி 4-வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 3-வது இடத்தை பிடிக்கும் என்று எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்ட இந்தியா, தற்போதைய ஆண்டிலும் நிலையான, வலுவான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில், அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறது. நடுத்தர வகுப்பினர் செலவழிப்பது அதிகரித்து வருகிறது.
நுகர்வோர் சந்தை விரிவடைவதால், பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு அதிகரிக்கும்.
இந்தக் காரணங்களால் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் டாலராக (ரூ.600 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.இதன்மூலம் ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளை முறியடித்து உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தைப் பிடிக்கும்.
ஆசிய அளவில் 2-வது இடத்தைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.