நீங்கள் காளான் பிரியரா? உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் காளானை சமைப்பீர்களா? எப்போதும் ஒரே மாதிரி தான் காளானை வீட்டில் செய்வீர்களா?
சற்று வித்தியாசமான முறையில் காளானை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் காளான் டிக்கா மசாலா செய்யுங்கள். இந்த காளான் டிக்கா மசாலா சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அதோடு சாதத்துடனும் சாப்பிடலாம்.
உங்களுக்கு காளான் டிக்கா மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் டிக்கா மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் – 2 கப் (இரு துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
* தயிர் – 1/4 கப்
* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 2 டீஸ்பூன்
* சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கசூரி மெத்தி – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் தயிர், கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சாட் மசாலா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் காளானை சேர்த்து வதக்க வேண்டும். காளானில் இருந்து நீர் வெளியேறி வற்றியதும், அதில் தயிர் கடலை மாவு கலவையை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* காளான் நன்கு வெந்து, மசாலாவில் உள்ள பச்சை வாசனை நீங்கி, கிரேவி சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கசூரி மெத்தி மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காளான் டிக்கா மசாலா தயார்.