தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி கேட்பார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ், கேரட் போன்ற காய்கறிகள் நிறைய உள்ளதா?
அப்படியானால் அந்த காய்கறிகளைக் கொண்டு மஞ்சூரியன் செய்யுங்கள். இந்த வெஜ் மஞ்சூரியன் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். குறிப்பாக இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவதோடு, அவர்களின் பசியும் அடங்கும்.
உங்களுக்கு வெஜ் மஞ்சூரியன்/வெஜ் மஞ்சூரியன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜ் மஞ்சூரியன்/வெஜ் மஞ்சூரியன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வெஜ் மஞ்சூரியன் பால்ஸ் செய்வதற்கு…
* முட்டைக்கோஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 கப் (துருவியது)
* குடைமிளகாய் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* சில்லி சாஸ் – 1/2 டீஸ்பூன்
* சோயா சாஸ் – 1/2 டீஸ்பூன்
* மைதா – 2 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் – 1 (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய், சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு, மிளகுத் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மைதா, சோள மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து, மிளகுத் தூளை சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி வேக வைக்க வேண்டும்.
* பின் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கிளறி, கிரேவியாக வேண்டுமானால் சற்று நீர் இருக்கும் போதே அணைத்துவிட வேண்டும் (ட்ரையாக வேண்டுமானால், நீரை வற்றவிட்டு இறக்க வேண்டும்.).
இப்போது சுவையான வெஜ் மஞ்சூரியன் கிரேவி தயார்.