சென்னை:
அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உட்பட மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் ருத்ர தாண்டவம் ஆடியது. பல மணி நேரம் கொட்டி தீர்த்த இந்த அதீத கனமழையால் ஒட்டுமொத்த சென்னையும் மொத்தமாக முடங்கிப்போனது.
மழை இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்த போதிலும், இந்தளவுக்கு ஒரு கனமழை இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. திங்கள் இரவு தொடங்கிய மழை பல மணி நேரம் கேப் விடாமல் கொட்டி தீர்த்தது.
மிக்ஜாம்:
இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது. மழை நின்ற பிறகு நேற்று முதல் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய பகுதிகளில் மழை நீர் வடிந்த நிலையில், போக்குவரத்தும் மெல்ல வழக்கம் போல ஆரம்பித்தது. இன்று மற்ற பகுதிகளிலும் மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல் கரையைக் கடந்துவிட்ட நிலையில், மழை நின்றுவிட்டது அடுத்த 3 மணி நேரத்தில்: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் சில இடங்களில் டிராபிக் நெரிசல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம்:
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் டிச. 8ஆம் தேதி: தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
டிச 9ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. டிச 9, 11 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் ” என்று கூறப்பட்டிருந்தது.