திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை எடுத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கருதப்படும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது. கடந்த முறை பின்பற்றியதை போல் இந்த முறையும் செயல்படுத்த திமுக முயற்சிக்கும் நிலையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை கூடுதல் தொகுதிகளை பெற கூட்டணி கட்சிகள் முட்டி மோதுகின்றனர்.திமுக கூட்டணியில் இதுவரை கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு ‘நாமக்கல்’ தொகுதியும், இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் கட்சி ‘இராமநாதபுரம்’ தொகுதியும் ஒதுக்கப்பட்டது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிகள் இடையே தனித்தனியான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் கடந்த முறை போட்டியிட்ட மதுரை மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்றது. இம்முறையும் அந்த 2 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.இம்முறை கூட்டணியில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியும் இணையும் என கூறப்படுகிறது. அவ்வாறு கமல்ஹாசன் இணையும் பட்சத்தில் அவரது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், அதில் ஒன்று கோயம்புத்தூர் தொகுதியாக இருக்கும் என தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. இதனால் கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இம்முறை கோயம்புத்தூர் தொகுதியை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுஇருப்பினும் மதுரை தொகுதியோடு மயிலாடுதுறை தொகுதியை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க தயார் என திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மார்க்சிஸ்ட் கட்சி மயிலாடுதுறை தொகுதியை ஏற்றுக்கொள்ளுமா? அல்லது வேறு தொகுதியை கேட்டு பேச்சுவார்த்தை நடத்துமா? என்பது விரைவில் தெரிய வரும்