ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் பரவலான வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து ஊர்வசி, தினேஷ் நடித்திருக்கும் ஜெ பேபி திரைப்படம் வரும் மார்ச் 8 ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தங்களின் அடுத்தத் தயாரிப்பை இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது நீலம் புரொடக்ஷன்ஸ். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்க, ரஞ்சித்தின் உதவி இயக்குநர் அகிரன் மோசஸ் படத்தை இயக்குகிறார். ஜீ.வி.பிரகாஷே படத்துக்கு இசையமைக்கிறார். நாயகியாக ஷிவானி ராஜசேகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.இவர்களுடன் பசுபதி, லிங்கேஷ் உள்ளிட்டவர்களம் நடிக்கிறார்கள். அத்துடன், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் குழிக்குள் விழும் சுபாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீநாத் பாஸி இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் தொடங்கியது. ரஞ்சித் கிளாப் அடித்துப் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அவரது பிற தயாரிப்புகள் போல் இதுவும் விளிம்புநிலை மக்களைக் குறித்துப் பேசுவதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கேற்ப சென்னை ஹவுஸிங்ஃபோர்ட் பகுதியில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடக்கிறது. இந்தப் படத்துக்கு ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை செல்வா ஆர்.கே. கவனிக்கிறார்.