நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே இன்று இரண்டாவது கட்ட பேச்சு நடைபெற உள்ளது. 2 தனித் தொகுதிகளுடன், ஒரு பொதுத் தொகுதியை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ள நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும், மனிதநேய மக்கள் கட்சியுடன் முதல்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக இன்று நடத்துகிறது. இதனிடையே, திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதேபோல, திமுக- மதிமுக இடையே முரண்பாடு இல்லை என்றும், மனதளவில் உடன்பாடு இருப்பதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.