பலரும் அறியாத உலர் ஐஸ் குறித்தும் அதன் ஆபத்துகள் ….
Dry ice-ஆல் வந்த வினை… டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்ட 5 நபர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இரண்டு நபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் சாப்பிட்டது மவுத் ஃப்ரெஷ்னர் இல்லை, ட்ரை ஐஸ் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உண்மையில் நடந்தது என்ன? இதுபற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதில் பல நபர்கள் வலியால் துடித்து அலறியபடி ஓடி வருகிறார்கள். ரெஸ்டாரண்டில் மவுத் ஃப்ரெஷ்னரை சாப்பிட்ட பிறகே இப்படி வாயில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. ஒருவர் அவசரமாக தனது வாயில் ஐஸ் கட்டியை திணிக்கிறார். இன்னொருவரோ அங்கேயே வாந்தி எடுக்கிறார். ஒருவேளை மவுத் பஃப்ரெஷ்னரில் ஏதாவது தவறுதலாக கலந்துவிட்டார்களா? பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாயை தண்ணீரால் கழுவிய பிறகும் எரிச்சல் போகவில்லை. ரெஸ்டாரெண்ட் பணியாளர்கள் தவறுதலாக உலர் ஐஸ் கட்டிகளை வழங்கியதாக தற்போது குற்றம் சுமத்தப்படுகிறது.
உலர் ஐஸ் கட்டிகள் என்றால் என்ன? தோராயமாக மைனஸ் 78.5°C (-109.3°F) வெப்பநிலையில் உள்ள திட கார்பன் டை ஆக்ஸைடையே உலர் ஐஸ் கட்டி என அழைக்கப்படுகிறது. குளிர்ச்சியான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அழுத்தம் கொடுப்பதன் மூலம் திரவ நிலைக்குச் செல்லாமலேயே தின்ம நிலையை அடைய வைப்பதால் இந்த ஐஸ் கட்டி உருவாகிறது. பொதுவாக இந்த உலர் ஐஸ் கட்டி பலவற்றில் கூலிங் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதன் பயங்கரமான குளிர்ச்சித்தன்மை காரணமாக ஆய்வகங்களில் பல்வேறு சோதனைகளுக்காகவும் திரைப்படங்களில் ஸ்பெஷன் எஃபெக்ட்ஸ்களுக்காகவும் ஷிப்பிங்கின் போது பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
ஆபத்தை விளைவிக்கும்… இதை முறையாக கையாளாவிட்டாலோ அல்லது மோசமான காற்றோட்டமுள்ள பகுதிகளில் வைத்தாலோ மனிதர்களுக்கு தீங்கை ஏற்படுத்தும். இந்த ஐஸ் கட்டியை நேரடியாக தொடுவதன் மூலம் தோல் உறைந்து அல்லது எரிந்து போகும் வாய்ப்புள்ளது. மேலும் இது கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றுவதால் காற்றோட்டம் இல்லாத பகுதிகளில் இதை சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனை எப்போதும் எச்சரிக்கையாகவே கையாள வேண்டும்.
ஒருவேளை தவறுதலாக இந்த Dry ice-ஐ சாப்பிடால் என்னவாகும்? இதனை சாப்பிடுவது உயிருக்கே ஆபத்தாக போய்விடும். இது திட நிலை கார்பன் டை ஆக்ஸைடு என்பதால், இதை உட்கொள்வதால் உடல் உறுப்புகளுக்குள் கடுமையான காயங்கள் ஏற்படும். நமது வாய்ப் பகுதியில் அல்லது செரிமானப் பாதையில் படுமானால், அதிகப்படியான கார்பன் டை ஆக்ஸைடு வாயுக்களை வெளியேற்றும். இதன் காரணமாக செரிமான அமைப்பில் ஆபத்தான வாயுக்கள் அதிகமாகி ஆக்ஸிஜன் அளவு குறைந்து வயிறு உப்புசம், வயிறு அல்லது குடல் வலி, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்படும். ஒருவேளை யாராவது உலர் பனிக்கட்டியை தவறுதலாக சாபிட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகும்.