மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவும், மாநில அரசுகளை மதிக்கும் அரசு மத்தியில் அமையவும், தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
வேண்டாம் மோடி என்று முழக்கமே இந்தியா முழுமைக்கும் எதிரொலித்துக் கொண்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தற்போது மாநிலம், மாநிலமாக சென்று பிரதமர் மோடி திட்டங்களை தொடங்கி வைப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமரின் அவசர கால பதற்றம், அவர் முகத்தில் இருக்கும் பயத்தை காட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில், 5 ஆவது முறையாக வெற்றிக் கூட்டணி தொடர்வதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவுற்றதாக குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அனைத்து தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் தான் வேட்பாளர் என்பதை மனதில் வைத்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசை அமைக்க வேண்டுமானால், 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாக வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.