தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது. மீண்டும் எம்எல்ஏ ஆவதால் அமைச்சர் ஆவதற்கும் பொன்முடிக்கு தடையில்லை..
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு ஏதுவாக ஒரு மாத காலம் நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்திருந்தார். 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். இதனை தொடர்ந்து உயர்க்கல்வித்துறையை கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கவனிப்பார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் சூமோட்டோ வழக்கில் 3 ஆண்டு சிறை என்பது அதிகபட்ச தண்டனை என பொன்முடி தரப்பு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை நிறுத்தி வைத்துள்ளதுடன், உச்சநீதிமன்றம் ஜாமீனும் வழங்கி உள்ளது. மேலும் பொன்முடி உள்ளிட்டோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நிறுத்தி வைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதி ஜெயச்சந்திரன் சூமோட்டோவாக எடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டிருந்ததுஇந்நிலையில், தண்டனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக வாய்ப்புள்ளது.