அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டம் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்தாண்டு முதல் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேர்ந்திருந்தாலும், அந்த மாணவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உதவித் தொகை திட்டத்தில் இனி மாதம்தோறும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்க இருப்பது மாணவிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அறிவிப்புகளை மாநில,மத்திய அரசாங்கங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில் தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அந்த அறிவிப்பு வெளியாகும் நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே அதற்கு முன்பாக அறிவிப்பை வெளியிடும் வகையில் ராமாமிர்தம் அம்மையார் உதவித் தொகை புதுமைப் பெண் திட்டத்தில் அரசு உதவி பெறும் பெண்களின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தில் இதுவரை 2லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வந்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பாணை அமலுக்கு வந்தால் மேலும் அதிக கல்லூரி மாணவிகள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.