கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அடுத்த பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவிற்கென்று பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பூந்தமல்லி கபாலி தெருவை சேர்ந்த ராஜ் பாலாஜி என்ற சிறுவன், குமணன்சாவடியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராஜ் பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜ் பாலாஜி மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல் சற்று குறைந்து வந்த நிலையில், உடலில் உப்பு அதிகமாக இருந்ததால், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிறுவன் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் நீடித்தால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.