இரவு 7 மணிக்கு செட்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி கூட்டாக பரப்புரை
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று பரப்புரை மேற்கொள்ள வருகை தருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆம் தேதிகளில் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அமித் ஷா பரப்புரை மேற்கொள் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.மீண்டும், மாலை 6.10 க்கு மதுரை விமான நிலையம் வரவுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, மாலை 6:20 மணிக்கு மதுரை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனை ஆதரித்து வாகன பேரணி நடத்த இருக்கிறார். பெரியார் பேருந்து நிலையத்தில் தொடங்கும் பேரணி, நகைக்கடை பஜார் வழியாகச் சென்று இரவு 7.05 மணிக்கு மதுரை விளக்குத்தூணில் நிறைவடைகிறது. இதையடுத்து, இரவு 7:15 மணிக்கு மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அமித் ஷா செல்லவுள்ளார்.
நெல்லையில் ராகுல் இன்று பரப்புரை
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இன்று தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். மாலை 3:50 மணிக்கு நெல்லைக்கு வர இருக்கும் ராகுல் காந்தி, மாலை 4 மணிக்கு, நெல்லை பெல் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
ராகுல், மு.க. ஸ்டாலின் ஒரே மேடையில் பரப்புரை
அங்கிருந்து கோவை புறப்படும் ராகுல் காந்தி, செட்டிபாளையத்தில், இரவு 7 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து கூட்டாக பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். கோவை திமுக வேட்பாளர் ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர். ராகுல் பரப்புரையை யொட்டி 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.