பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நரேந்திர மோடியின் முந்தைய பாஜக ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்த 20 பேர் பதவியை இழக்கும் நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த அண்ணாமலை, தமிழிசை, வானதி, உள்ளிட்ட புதிய முகங்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவின் முந்தைய ஆட்சியில் செல்வாக்கு மிக்க மத்திய அமைச்சர்களாக இருந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தேர்தலில் களம் காணவில்லை. அதே சமயம், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் பலர் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதனால், அமைச்சரவையில் இருந்த 20 பேர் தங்கள் பதவிகளை இழந்துள்ளனர். அதில் முக்கியமானவர், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன். இவர், திமுகவின் ஆ.ராஜாவிடம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 585 வாக்குகள் என்ற பெரும் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.மத்திய ஜல்சக்தி அமைச்சராகவும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருந்த ராஜீவ் சந்திரசேகர், திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸின் சசி தரூரிடம் 16 ஆயிரத்து 77 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி, அமேதி தொகுதியில் கிஷோரி லாலிடம் தோல்வியடைந்தார். கடந்த முறை ராகுல்காந்தியை தோற்கடித்த ஸ்மிருதி, இம்முறை ஒரு லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டார்.
சர்ச்சைக்குள்ளான முன்னாள் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக இருந்த அர்ஜூன் முண்டா, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராக இருந்த ராஜ்குமார் சிங், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்த முரளிதரன் உள்பட மொத்தம் 20 பேர் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால், மாநிலங்களவை எம்பிக்களுக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமைச்சரவை பொறுப்புகள் தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டெல்லி இல்லத்தில் மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இலாகாக்கள் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து நட்டாவும், அமித்ஷாவும் ஆலோசித்துள்ளனர்.
இதில், பாதுகாப்புத்துறை, நிதித்துறை, உள்துறை, ரயில்வே மற்றும் சாலைப் போக்குவரத்து துறைகளை தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை, இரும்பு மற்றும் உருக்கு சார்ந்த துறையை கூட்டணி கட்சிக்கு தர திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதுதமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக சார்பில் போட்டியிட்ட முக்கிய முகங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்துள்ளனர். ஆனாலும், மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுக்கு இடம் வழங்குவது குறித்து பாஜக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், அதற்கான பெயர் பரிந்துரைகள் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அதில், ஏற்கனவே அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் பெயர் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு 2 அல்லது 3 இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.