விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார்.
மறைந்த தேமுதி நிறுவன தலைவர் விஜயகாந்திற்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை, அவரது மனைவி பிரேமலதா, குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டார். பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, நடிகர் சிரஞ்சீவி, போலியோவால் கை,கால்களை இழந்த நிலையிலும் தொழில் முனைவோராக உருவெடுத்த கர்நாடகாவின் ராஜண்ணாவுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும், 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் வெங்கையா நாயுடு உட்பட 65 பிரபலங்களுக்கு கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விடுபட்ட நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பிரபலங்களுக்கான பத்ம விருதுகளை டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
விஜயகாந்த் சார்பில் அவரது மனைவி பிரேமலதா விருதைப் பெற்றார். அப்போது விஜயகாந்தை நினைவுகூறும் வகையில் சில விநாடிகள் வானத்தை நோக்கினார். முன்னதாக நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த பிரமலதா, விஜயகாந்தை விரும்பும் அனைவருக்கும் இந்த பத்ம விருது சமர்ப்பணம் என கூறினார்.இதேபோல், பழம்பெரும் நடிகையுமான வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாரம்பரிய வள்ளிக் கும்மி நடனக் கலைஞர் பத்ரப்பன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.போலியோவால் கை, கால்களை இழந்த நிலையிலும் தளராது தனது தன்னம்பிக்கையால் பொறியாளராகவும், தொழில் முனைவோராகவும் உருவாகி பல மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதுடன் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று அசத்திய கர்நாடகாவின் கே.எஸ். ராஜண்ணாவுக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இதனிடையே, பத்ம விருதுகளை பெற்றவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சார்பில் இரவு சிறப்பு விருந்து டெல்லியில் அளிக்கப்பட்டது.