Rajinikanth On Vijay: முதலமைச்சர் விஜயை இரண்டு வருடங்களுக்கு தொந்தரவு செய்யாமல் பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என, ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
Rajinikanth On Vijay: தவெக தலைவர் விஜய் தேர்தலில் வென்று முதலமைச்சரானதில் தனக்கு எந்தவித பொறாமையும் இல்லை என ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பு:
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சியை இழந்ததோடு கொளத்தூர் தொகுதியிலும் தோல்வியுற்ற முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அதன் பிறகே திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முற்படுவதாக தகவல்கள் வெளியாக தொடங்கின. இதனால், இந்த கூட்டணி திட்டத்திற்கு விதை போட்டதே ரஜினி தான் என விமர்சனங்கள் எழுந்தன. இதுபோக அண்மையில் விமான நிலையத்தில் விஜய் முதலமைச்சரானது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, வாழ்த்து கூட சொல்லாமல் ரஜினி கடந்து சென்றார். இதனால் தன்னால் முடியாததை விஜய் செய்தால் பொறாமை கொண்டுள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக இன்று போயஸ்கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
விஜய் மீது எனக்கு பொறாமையில்லை..
அப்போது பேசுகையில், “ஸ்டாலின் உடனான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் கொளத்தூரில் தோல்வி கண்டதை ஏற்க முடியாததால் நேரில் சென்று சந்தித்தேன். விமான நிலையத்தில் என்னிடம் கேள்வி எழுப்பிய நபர், போன் மட்டுமே கொண்டு வீடியோ பதிவு செய்ததால் அவர் செய்தியாளர் என்பதை நான் அறியவில்லை. விஜய் மீது எனக்கு எந்த பொறாமையும் இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியானதுமே சமூக வலைதளத்தில் நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். 60 ஆண்டுகளாக ஆண்ட கட்சிகளிடம் இருந்து மாற்றம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய் வந்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள் ” என ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.
”ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது”
தொடர்ந்து பேசுகையில், “எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் ஒப்பிட்டால் அது தவறானது. விஜயை சிறுவயதில் இருந்து பார்த்திருக்கிறேன். எம்ஜிஆர், என்.டி.ஆரை விட விஜய் தனியாளாக ஜெயித்துள்ளார். அதில் எனக்கு ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோசம் தான் உண்டானது. மத்தியில் பாஜக, தமிழ்நாட்டில் இரு பெரிய கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.
என்னுடைய ரசிகர்கள் வருத்தப்படுவதைப் பற்றி சொன்னார்கள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என 3 பக்க அறிக்கையில் தெளிவாக சொல்லிவிட்டேன். அதன்பிறகு திரும்ப திரும்ப கேட்கிறார்கள். நான் அரசியலுக்கு வராத ஆதங்கம் இருக்கும் என்பது எனக்கு புரிகிறது. சினிமா வேறு, அரசியல் வேறு. என்னோட ரசிகர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவு கொடுக்கிறீர்களோ தாராளமாக செய்யுங்கள் என சொல்லிவிட்டேன்” என ரஜினி பேசினார்.
”விஜயை இரண்டு வருடங்களுக்கு வேலை செய்ய விடுங்கள்”
முதல்முறையாக ஆட்சிக்கு வந்து இருக்கக் கூடிய தவெக தலைவர் விஜய்க்கு உங்களுடைய அறிவுரை மற்றும் ஆலோசனை என்னவென செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், “புதிய அரசின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அதனை நிச்சயம் பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். ஒரு இரண்டு வருடங்களுக்கு அவரை வேலை செய்ய மக்கள் விட்டுவிட வேண்டும். அவகாசம் தர வேண்டும். மற்றொன்று, அவருடைய தொண்டர்கள் ஆகட்டும், ரசிகர்கள் ஆகட்டும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். அதாவது நாம் தவறு செய்தால் கூட அது நேராக விஜயை தான் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்” என ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.