TVK Vijay Governor House Rally: பெரும்பான்மையை நிரூபித்தும் ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால், ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் விஜய் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
TVK Vijay Governor House Rally: குதிரை பேரம் நடைபெறுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்வைத்த குற்றச்சாட்டு தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
118-ஐ எட்டாத தவெக:
சட்டமன்ற தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களில் வெற்றியை உறுதி செய்யவில்லை. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் ஆதரவை நாடி வருகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன், தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் தேவையான இரண்டு உறுப்பினர்களின் ஆதரவிற்காக விசிக தலைவர் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அவரது ஆதரவும் கிடைத்தல் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு, விஜய் மீண்டும் ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை ஆளுநர் ஏற்றால் தமிழ்நாட்டின் முதல் சிறுபான்மை சமூக முதலமைச்சராக விஜய் உறுதியேற்பது உறுதியாகிவிடும்.
குதிரை பேர குற்றச்சாட்டு
இதனிடையே, பல்வேறு அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரிய தவெகவிற்கு, அமமுக சார்பில் வெற்றி பெற்ற காமராஜரும் ஆதரவு அளித்ததாக, அதற்கான நகல் கடிதத்தையும் விஜய் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உண்மையில், காமராஜர் ஆதரவு விஜய்க்கு இல்லை எனவும், அவரது பெயரில் போலி கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்துள்ள தவெக, குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார். பணம் கொடுத்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதாக விஜய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானதாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு ”நோ” சொல்லுவாரா ஆளுநர்?
டிடிவி தினகரனின் புகாரை தொடர்ந்து, விசிகவின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை பெற்றாலும், அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குதிரை பேரம் நடத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் விஜய்க்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பெரும்பான்மையை பெற்றும் விஜய் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்படலாம்.
ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி?
ஒருவேளை தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக கூட்டணியுடன் பெரும்பான்மையை எட்டிய பிறகும் கூட, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காவிட்டால் அவரது மாளிகையை நோக்கி விஜய் பேரணியாக செல்வார் என கூறப்படுகிறது. குதிரை பேரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதையும் காட்சிப்படுத்த இந்த நடவடிக்கையை விஜய் மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
என்.டி.ஆர்.பாணியில் விஜய்?
1984ஆம் ஆண்டு என்.டி.ஆரின் தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும்பான்மை இல்லையென கூறி அவரது ஆட்சியை ஆளுநர் தன்னிச்சையாக கலைத்தார். இதனையடுத்து, ஆதரவு எம்.எல்.ஏக்களையெல்லாம் அழைத்துக்கொண்டு, அதிரடியாக டெல்லி சென்ற என்.டி.ஆர், குடியரசுத் தலைவர் மாளிகை முன்னர் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். பின்னர், குடியரசுத் தலைவரை சந்தித்த என்.டி.ஆர், பெரும்பான்மை இல்லையென்ற நிலை வந்தால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடவேண்டுமே தவிர, ஆட்சியை கலைக்கக் கூடாது என வலியுறுத்தி, தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்து, தன்னுடைய ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என போராடினார்.
அனைத்து தரப்பு வாதத்தையும் கருத்தில்கொண்ட குடியரசுத் தலைவர், என்.டி.ஆர் ஆட்சியே ஆந்திராவில் தொடரும் என்று அறிவித்தார். அதே பாணியில் விஜயும் தனக்கான அரியாணைக்காக சாலையில் இறங்கி போராடி சாதிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.