“இது வெறும் தேர்தல் களமல்ல… அறப் போர்க்களம்!” — முதல்வர் ஸ்டாலின்

214 0

சென்னை: “இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல… ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப்போர்க்களம்” என்று திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவை மீட்பதற்கான அறப்போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழகம் இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் மக்களவைத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம்.

 

 

திமுகவின் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களில் அனுபவமிக்கவர்களும் உண்டு; அறிமுக வேட்பாளர்களும் உண்டு. அனைவருமே உதயசூரியன் சின்னத்தின் வேட்பாளர்கள் என்பது மட்டுமே தொண்டர்களாம் உங்கள் இதயச்சுவரில் பதிய வேண்டிய செய்தி. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள்தான். அவர்களின் சின்னங்களும் நம்முடையதுதான்.நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்கிற உணர்வுடனும் கொள்கை உறவுடனும் இண்டியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திட வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப்பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு உடன்பிறப்பையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் களப்பணிகளை ஊக்கப்படுத்திடவும், தமிழக வாக்காளப் பெருமக்களின் ஆதரவைத் திரட்டிடவும், நாற்பது தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியினை உறுதி செய்திடவும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் நேரில் வருகிறேன். நாளை (மார்ச் 22) தீரர் கோட்டமாம், திருப்புமுனைகள் பல தந்த திருச்சியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன். தொடர்ச்சியான பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தலைமைக் கழகம் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கேற்ப அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகத்தினர், தோழமைக் கட்சியினர், ஆதரவு இயக்கங்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளுக்குட்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் கட்சியின் பரப்புரை இடைவிடாத அளவில் நடைபெற வேண்டும் என்பதற்கேற்ப கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகளும், கொள்கைப் பரப்பு செயலாளர்களும், தலைமைக் கழகப் பேச்சாளர்களும் தொடர்ச்சியான பரப்புரைப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் திண்ணைப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஜனநாயகப் போர்ப்படையின் முன்கள வீரர்களான கட்சி தொண்டர்களிடம் உங்களில் ஒருவனான நான் அடிக்கடி வலியுறுத்துவது போல, வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் மக்களின் உள்ளத்தில் உண்மை நிலவரத்தைப் பதிய வைக்கும். நம்பிக்கையை மேம்படுத்தும். வெற்றியை உறுதி செய்யும்.

2024 மக்களவைத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால், மனித குலத்தின் எதிரிகள்.

பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது என்பதைக் குறிக்கோளாகவே கொண்டிருக்கிறார்கள் மத்திய பாஜக ஆட்சியாளர்கள். பிரதமர் என்கிற மாண்புக்குரிய பொறுப்பை வகிப்பவர் தொடங்கி மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பரப்புரையாக மேற்கொண்டு வருவதை கடந்த சில நாட்களாக தமிழகத்தின் வாக்காளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழகத்துக்குக் கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் திமுகவை விமர்சிப்பதும், திமுக ஆட்சி மீது வீண்பழி போடுவதும், திமுக கூட்டணி பக்கம்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிவதால், தமிழர்களையே தீவிரவாதிகள் எனச் சித்தரிப்பதும் பாஜகவின் பரப்புரை ஃபார்முலாவாக இருக்கிறது.

நம்மிடம் பெரியாரின் சமூகநீதிக் கொள்கை உள்ளது. ஜனநாயகக் களத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற கண்ணியத்தைக் கற்றுத் தந்த அண்ணாவின் வழிமுறை இருக்கிறது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் வழியில் தொடரும் ஆட்சியின் சாதனைகள் நிறைந்திருக்கிறது. அவற்றைத் தேர்தல் களத்தின் ஆயுதங்களாகக் கையில் ஏந்துவோம். பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகம் எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்துச் சொல்வோம்.

அதற்கு அதிமுக எப்படி துணைபோனது என்கிற துரோகத்தையும் மறக்காமல் எடுத்துரைப்போம். தனித்தனியாக நிற்கும் கள்ளக்கூட்டணியின் முகத்திரையைக் கிழித்திடுவோம். வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்களையும் வதந்திகளையும் முறியடிக்கும் வகையில் ஆன்லைன் பரப்புரையையும் முனைப்புடன் மேற்கொள்வோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளர்களிடமும் திமுக கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவோம். ஒவ்வொரு வாக்கும் நம் ‘இண்டியா’வின் வெற்றியை உறுதி செய்யட்டும்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, எளிய மக்களை நடுஇரவில் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, ‘புதிய இந்தியா பிறந்தது’ என்று வெற்று முழக்கமிட்ட பிரதமரும் பாஜகவினரும் இப்போது ‘இந்தியா’ என்று உச்சரிக்கவே தயங்குகிறார்கள் என்றால் இதுதான் நாம் கட்டமைத்துள்ள உண்மையான புதிய ‘இந்தியா’வின் முதற்கட்ட வெற்றி. அந்த வெற்றி தேர்தல் களத்திலும் தொடர்ந்திடும். ஆட்சி மாற்றத்தை உருவாக்கும்.

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான தேர்தல் களமாக அமைந்துள்ளது. இது வெறும் தேர்தல் களமல்ல.. ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய அறப் போர்க்களம். இந்தப் போரில் நாம் வென்றாக வேண்டும். ஓயாது உழைத்தால் உறுதியான வெற்றி நிச்சயம்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Post

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 18, 2026 0
கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள்…

விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்

Posted by - January 30, 2025 0
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு : ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம்!

Posted by - March 23, 2023 0
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர்  பரபரப்பான வாதங்களை முன்வைத்த நிலையில், இரு தரப்பும் எழுத்து பூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை காலைக்குள்…

’திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்’ அதிரடி காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Posted by - October 8, 2025 0
சென்னையை அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்களாக பிரிக்கவும், டெல்டாவில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கவும் திமுக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஆறு மாவட்ட…

“பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம்”- உருக்கமாக பேசிய ஆதவ் அர்ஜுனா

Posted by - October 11, 2025 0
த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். த.வெ.க.வை முடக்கும் நோக்கில் செயல்படுவதாக அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *