மேட்டூர் அணை உபரிநீரில் இருந்து 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் சேலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் சங்ககிரியில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் தொடங்கப்பட்டு விரிவுப்படுத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. அதிமுக முழு பலத்தோடு எதிரிகளை வீழ்த்தும். இன்றைய தினம் தமிழ்நாட்டை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தேர்தல் நடக்கிறது. ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுகிறார்கள். இந்த தேர்தலில் அதற்கு முடிவு கட்ட வேண்டும். அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தியதன் மூலம் விவசாயிகள் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து திட்டத்தை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு வழங்கப்பட்டு விட்டது. அதன்படி தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, மளிகை கடையில் கிடைப்பது போன்ற தரத்துடன் வழங்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. காவல்துறை செயலிழந்து கிடக்கிறது. போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த முடியவில்லை. கஞ்சா விற்பனை நகரம் முதல் கிராமம் வரை அதிகளவில் நடக்கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது. கஞ்சா போதைக்கு அடிமையாகி நம்முடைய மாணவச் செல்வங்கள் சீரழிகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். அழிவுப் பாதையில் இருந்து தமிழ்நாட்டை பொதுமக்கள் காப்பாற்ற வேண்டும். குற்ற நிகழ்வுகள் அதனால் தான் நடக்கிறது. நல்லாட்சி மக்கள் தேர்ந்தெடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராகும். ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட தலைவாசல் கால்நடை பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. மேட்டூர் அணை உபரிநீர் திட்டமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் திமுக அரசு நல்ல திட்டங்களை முடக்கி விவசாயிகளை பழிவாங்குகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விரிவுபடுத்தி நிறைவேற்றுவோம்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு கறவை மாடு, கோழிகள் வழங்கப்படும். இதன்மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு தீபாவளிக்கும் கைத்தறியில் நெய்யப்பட்ட பட்டுப்புடவை கொடுக்கப்படும். நலிவடைந்த விசைத்தறி தொழில், லாரி தொழில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். இதனைப் போக்குவதற்காக ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவிகளின் கணக்கிற்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 5 லட்சம் மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.ஆயிரம் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை வியாபாரிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வீடில்லாத அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். பட்டியல் இன மக்களுக்கு நிலம் வாங்கி வீடு கட்டித் தரப்படும். திருமணமாகி தனிக்குடித்தனம் செல்வோருக்கும் வீடு கட்டித் தரப்படும். பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
சங்ககிரி தொகுதியில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முழுமையாக கூட்டுக்குடிநீர் திட்டம், சாலைகள் கொண்டு வரப்பட்டன. ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக அதிமுக ஆட்சி நடத்தியது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.