கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமராக மோடி 3ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து 72 பேர் பதவியேற்ற நிலையில், மாநில மற்றும் கூட்டணி வாரியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் யார், யார் என விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு!
மோடி 3.0 அமைச்சரவையில் 21 மாநிலங்கள் மற்றும் டெல்லி, ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிர்தேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவை பட்டியல் அமைந்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் இருந்து 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
பாஜக தவிர கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு 5 கேபினட் அமைச்சர், ஒருவருக்கு தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், 5 இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இருவருக்கும், பாஜக சார்பில் ஒருவருக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதே போல, மற்றொரு முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உள்ள பிகார் மாநிலத்தில் இருந்தும் பலர் அமைச்சர்களாகியுள்ளனர்.
குறிப்பாக, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட கர்பூரி தாகூரின் மகன் ராம்நாத் தாக்கூருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர்களான நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடத்தை தக்க வைத்தனர். மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த போதும், எல்.முருகனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.இதே போல, பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் தோல்வியடைந்த ரவ்னீத் சிங் பிட்டு-விற்கும் அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக தலைவராக உள்ள சுகந்தா மஜூம்தார் மற்றும் தெலங்கானாவில் பாஜகவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த பன்டி சஞ்சய் ஆகியோருக்கும் மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.