ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற விழாவில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசையை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கட்சியின் மாநில தலைவராக இருந்தவரை, இரண்டு மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்தவரை அவமதிக்கும் வகையில் அமித்ஷா நடந்து கொண்டது முறையல்ல எனவும் சிலர் விமர்சிக்கின்றனர். உண்மையில் என்ன பேசியிருப்பார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுகவும் -பாஜகவும் இணைந்து போட்டியிட்டிருந்தால், 30-35 தொகுதிகளை கைப்பற்றியிருப்போம் என்றார்.
எஸ்.பி.வேலுமணியின் கருத்து கூட்டணி கணக்கு அடிப்படையில் சரியானது என தமிழிசை சவுந்தரராஜனும் ஆமோதிக்க, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ, அதற்கு நேர் எதிராக பேசினார். தமிழ்நாட்டில் பாஜக தனியாக போட்டியிட்டது தங்களுக்கு சாதகமாக அமைந்தது என்றும், பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஒரு கட்சியில் உள்ள இரண்டு தலைவர்களின் மாறுபட்ட கருத்தால் சலசலப்பு ஏற்பட, சமூக விரோதிகள் பலருக்கும் பாஜகவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக தமிழிசை தனியார் ஊடக பேட்டியில் தெரிவித்தது இன்னும் சர்ச்சையை கூட்டியது.
இந்த நிலையில், தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு என செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு டெல்லி சென்ற அண்ணாமலை தமிழக சூழல் குறித்து விளக்கம் அளித்ததாகவும், அப்போது கட்சி தலைமை அவரிடம் சில அறிவுறுத்தல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, தமிழ்நாடு திரும்பிய அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மறுத்தார்.
இந்த நிலையில் தான், ஆந்திரா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசை வணக்கம் சொன்ன போது, அவரை அழைத்து அமித்ஷா பேசியுள்ளார். தம்மை கடந்து சென்ற தமிழிசையை அழைத்து அமித்ஷா கண்டிப்பான குரலில் கை விரல்களை உயர்த்தியபடி பேசினார்.இதுதொடர்பாக சென்னை திரும்பிய தமிழிசையிடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் , அனைத்தும் ஓகே என்பதுபோல் கையை உயர்த்திக் காட்டிச் சென்றார். அப்படி அமித்ஷா என்ன சொன்னார்? ஏன் இப்படி கடுமை காட்டினார் என்பது கட்சிகள் கடந்தும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.