Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது.
மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 13 கி.மீ நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பகுதியில் மாமல்லபுரத்தில் ஒட்டி கரையை கடக்க கூடும்.
இதன் காரணமாக வட கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வரை காற்றுவீசும். மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து 80 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். தென் தமிழக பகுதியில் அதிகபட்சமாக 60 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.
மாண்டஸ் புயல் வலுவிழந்த நிலையில் கரையை கடக்கும் போது வேகம் எடுக்குமா? அல்லது மேலும் வலுவிழந்து கரையை கடக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. ஆனால் புயலின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதாகவும் தற்போதைய நிலவரப்படி புயலாகவே மாண்டஸ் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புயல் அருகில் வரும் போது தான் அதில் ஏற்படும் மாற்றம் குறித்து தெரிவிக்க முடியும் என்று தென் மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் மாண்டஸ் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும்சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மின கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.தருமபரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது.