அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்.
“இங்கு பாம்பு தான் அரசியல் என்றும் அதை கையில் பிடித்து விளையாடும் குழந்தை நான்” என்றும் தவெக மாநாட்டில் விஜய் உரையாற்றினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் எந்தவொரு குறிப்பு பேப்பர் இல்லாமல் எளிய நடையில் பேசியது கவனம் பெற்றுள்ளது.
வழக்கமாக அரசியல்வாதிகள் மேடையில் இருப்போரை வரவேற்று பேசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் இதனை தவிர்த்து, நேரடியாக மக்கள் பேசும் யதார்த்த மொழியில் பேசியது வரவேற்பை பெற்றது. முதன்முறையாக அரசியல் மேடையில் மைக்கை பிடித்த விஜய் பேசியதாவது:-
ஒரு குழந்தை முதன்முதலாக அம்மான்னு சொல்றப்ப அம்மாவுக்கு ஒரு சிலிர்ப்பு வரும் பாருங்க… அந்த சிலிர்ப்பு எப்படி இருந்துச்சுன்னு அந்த அம்மா கிட்ட கேட்டா அவங்களால தெளிவாக விளக்கி சொல்ல முடியும். ஆனா அந்த உணர்வு எப்படி இருந்துச்சுன்னு குழந்தை கிட்ட கேட்டா அந்த குழந்தைக்கு எப்படி சொல்ல தெரியும்?
குழந்தைகிட்ட எதை கேட்டாலும் பால் வாசம் மாறாத வாயோட வெள்ளந்தியாக சிரிக்க மட்டும் தானே தெரியும். அந்த குழந்தை உணர்ந்த சிலிர்ப்பை வார்த்தைகளால் சொல்ல தெரியாது. அப்படி ஒரு உணர்வோட தான் இப்ப நான் உங்க முன்னாடி நிற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அம்மா கிட்ட கூட தன்னோட உணர்வை சொல்ல முடியாத குழந்தைக்கு முன்னாடி ஒரு பாம்பு வந்து படம் எடுக்குதுன்னு வைத்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கும்? யார் முன்னாடி பாம்பு வந்து நின்னாலும் அலறி அடிச்சு ஓடுவாங்க….‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்று ஒரு பழமொழி இருக்கு. ஆனா அந்த குழந்தை என்ன செய்யும் தெரியுமா? தன்னோட அம்மாவை பார்த்து சிரிச்ச அதே சிரிப்போட, கொஞ்சம் கூட அலட்டிக்காம அந்த பாம்பையும் சிரிச்சுக்கிட்டே தன்னுடைய கையில புடிச்சு விளையாட ஆரம்பிக்கும். அப்போ அந்த குழந்தைக்கு பாம்பை கண்டால் பயம் இருக்காதா என்ற கேள்வியும் வரும். பாச உணர்வையே சொல்லத் தெரியாத அந்த குழந்தைக்கு பயம்னா மட்டும் எப்படி சொல்ல தெரியும்? இங்கு அந்த பாம்புதான் அரசியல். அரசியல்ல நாம குழந்தைதான் என்பது மத்தவங்களோட கமெண்ட். ஆனா பாம்பாக இருந்தாலும் பயம் இல்ல என்பதுதான் நம்மளோட கான்ஃபிடன்ட்” என்று விஜய் பேசினார்.மேலும் அரசியல் ஒரு போர்க்களத்தில் தொண்டர்கள் கவனமாக களமாட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.முன்னதாக மாநாடு மேடைக்கு வந்த விஜய் மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களைச் சந்தித்தார். பிறகு சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் மொழிப்போர் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்தி கொடியை ஏற்றினார். பிறகு தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.தவெகவின் கொள்கையும் செயல்திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி கட்சியின் கொள்கையை பேராசியர் சம்பத்குமார் அறிவித்தார்.