உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல், பெரிய விசயம் இல்லை என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்..
திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல் பெரிய விசயம் இல்லை என்றும் தற்போதே, தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
திமுக அரசை கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், வருகிற 13 ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்கான கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அப்போது, முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அதிமுகவுக்கு கூடும் கூட்டத்தை தமிழக உளவுத்துறை முதல்வரிடம் எடுத்து கூறியிருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிரிந்து சென்ற நாளை அமைதி பேரணி நடத்தி மதுரையில் அவரை நினைவு கூர்ந்தோம். அதிமுகவின் தொடர் போராட்டம் வெற்றி பெறுவதை, திமுக அமைச்சர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அதிமுகவை உட்கட்சி பூசல் என குற்றம் சாட்டி திசை திருப்புகின்றனர்.
திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் யாரும் பொருட்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின் எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது. அதிமுகவை குறைத்து மதிப்பிடுபவர்களுக்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் போராட்டம் நடைபெறும்.