எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள்.
தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதற்கு நாம் தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம். இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஸ்கிரீன் நேரத்தை நினைத்து கவலைப்படுகின்றனர்.பெற்றோர்கள் எப்பொழுதும் தங்களுடைய குழந்தைகள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் தற்போதைய குழந்தைகள் எப்போதும் டிவி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது டேப்லெட், மொபைல், லேப்டாப் போன்றவற்றை நோண்டுவது என்று கெட்ட பழக்கங்களை கற்றுக் கொண்டுள்ளனர்.அதிலும் குறிப்பாக சாப்பிடும் போது கூட இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபடுவது பெற்றோர்களுக்கு மிகுந்த கவலையை அளித்து வருகிறது. இந்த நடத்தையானது அவர்களுடைய நல்வாழ்வில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். ஆகவே உங்களுடைய குழந்தைகள் அவர்களுடைய உணவு நேரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு உதவும் ஒரு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.முதலில் சாப்பிடும் போது மொபைல் அல்லது பயன்படுத்துவது அல்லது டிவி பார்ப்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்களுடைய பிள்ளைக்கு நீங்களே ஒரு சிறந்த முன்னுதாரணம் என்பதை எப்போதும் மறந்து விடாதீர்கள். எனவே குறைந்தப்பட்சம் உங்கள் பிள்ளைகளின் முன்பாவது இந்த மாதிரியான விஷயங்களில் ஈடுபட வேண்டாம். இரண்டாவதாக உங்களுடைய குழந்தைகள் சாப்பிடும் பொழுது அவர்களை முழுவதுமாக என்கேஜ் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.உதாரணமாக அவர்கள் சாப்பிடும் போது அவர்களிடம் நீங்கள் ஏதாவது ஒரு புதிரை தீர்க்கும்படி கேட்கலாம். அப்படி நீங்கள் செய்யும் போது அவர்கள் போன் அல்லது டிவி போன்றவற்றை மறந்து சுவாரஸ்யமாக உங்களுடன் பேச ஆரம்பித்து விடுவார்கள்.அடுத்ததாக அவர்கள் சாப்பிடும் போது பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றிய ஒரு சில கதைகளை அவர்களுக்கு சொல்லலாம் அல்லது அவர்கள் சாப்பிடுவதற்கு பயன்படுத்தும் தட்டு என்ன நிறத்தில் இருக்க வேண்டும் அல்லது என்ன நிறத்தில் உள்ள பழங்கள் அல்லது காய்கறிகளை அவர்கள் சாப்பிட விரும்புகிறார்கள் என்பது போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.மேலும் சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பு அந்த உணவுக்கு நன்றி செலுத்தும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். அந்த நாளில் நடந்த ஒரு சந்தோஷமான தருணத்தை பற்றி பகிர்ந்து கொள்வது கூட பயனுள்ளதாக அமையும். இந்த மாதிரியான சிறு சிறு யுக்திகளை நீங்கள் பின்பற்றினாலே நிச்சயமாக உங்கள் பிள்ளைகளிடம் இருந்து பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.