தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளிக்கு தீ விபத்துகள் குறைவாக இருந்ததாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவனக் குறைவாக பட்டாசுகளை வெடிக்கும்போது தீ விபத்துகளும், தீக்காயங்களும் ஏற்படுவது வழக்கம். இந்த விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கி இருந்தனர்.
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடும் வகையில், தீயணைப்புத்துறை சார்பில் சென்னையில் 276 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரத்து 46 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு பட்டாசு தீ விபத்துகள் குறைவாகவே பதிவாகியுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 254 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு 150 விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 102 தீ விபத்துகள் ஏற்பட்ட நிலையில் இந்த ஆண்டு 48 தீ விபத்துகள் பதிவானதாக தீயணைப்புத்துறை கூறியுள்ளது.தீ விபத்தில் காயமடைந்த 544 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதனிடையே சென்னையில் நேர விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.