டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலக்கு வருகிறது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வேளாண் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் வாகன மற்றும் தொழிற்சாலை மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. நேற்று ஆனந்த் விஹார் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அபாயமான வகையில் 466 ஆக பதிவான நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. டெல்லியில் இன்று காற்றின் தரக்கு குறியீடு 441 ஆக பதிவாகி அச்சுறுத்தி வருகிறது. இது ஒரு நாளுக்கு ஒருவர் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான அளவில் காற்றில் மாசு எள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் மிக குறைந்த அளவிலே தென்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர், வயதானவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மருத்துவமனைகள் சுவாசக் கோளாறு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக டெல்லி முழுவதும் தெரிவுநிலை குறைந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல் “நிலை 3” எனும் செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசியமற்ற கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு, சுகாதாரம், சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது.BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்கள் மற்றும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படுகிறது. மின்சாரம், சிஎன்ஜி அல்லாத வெளிமாநில பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த அறிவிப்பு வரும் வரை டெல்லியில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.காற்று மாசை கட்டுப்படுத்த “நிலை 3” செயல் திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.