கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கருணாஸ், பாபி தியோல், யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேற்று (14ம் தேதி) உலகெங்கிலும் 10,000 திரையரங்குகளில் 8 மொழிகளில் வெளியானது. மேலும், கங்குவா படம் முன்பதிவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டி மிரளவைத்தது.
இந்தப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானதும் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர். இதில், பாசிட்டிவ் கருத்துகளும், நெகட்டிவ் கருத்துகளும் இருந்தன. ஆனால், பெரும்பான்மையான ரசிகர்களும், மக்களும், படம் முழுக்க அதிக சத்தம் இருக்கிறது. இதனால், ஒருவகையான எரிச்சலும், தலைவலியும் வருகிறது என விமர்சித்திருந்தனர்.இது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கங்குவா படத்தில் இருக்கும் அதீத ஒலி குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரீ-ரிகார்டிங் செய்யும் என் நண்பர் ஒருவர் இந்த காணொளியை எனக்கு அனுப்பினார். நமது பிரபலமான திரைப்படத்தில் ஒலி குறித்து இப்படியான விமர்சனத்தை பார்க்கும்போது மனமுடைகிறது. எங்களின் கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளன. இதற்கு யாரை குற்றம் சொல்வது?