நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சராக பதவியேற்க போகும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் நாளை உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியானது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நாளை காலை 9:30 மணிக்கு அவர் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.
இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சேப்பாக்கத்தின் தென்றல் இனி தமிழ்நாடெங்கும் வீசட்டும் என கூறி வாழ்த்து தெரிவித்தார்.
சேப்பாக்கத்தின் தென்றல் இனி செந்தமிழ் நாடெங்கும் வீசட்டும்;
புது சாதனைகளை, நூறாண்டுகள் வரலாறு பேசட்டும்;
இளைஞர்களின் நம்பிக்கை, எதிர்கால தமிழ்நாட்டின் விடிவெள்ளி, அமைச்சராக பதவி ஏற்கும் கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு @Udhaystalin அவர்களுக்கு நெஞ்சம் நெகிழும் வாழ்த்துகள்!
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) December 12, 2022
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் டிசம்பர் 14 காலை 9:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் 400 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையுடன் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை ஒதுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.