தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் இணைந்து வரும் நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல்
அதிமுக பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என 4 பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களில் வாக்குகள் சிதறி அதிமுகவின் தோல்விக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக பிரிந்து சென்ற தலைவர்கள் இணைய வேண்டும் என அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பல கட்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வமும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் என அறிவித்தார்.
திமுகவிற்கு பல்டி அடிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்களை எப்போதும் இணைக்க மாட்டோம் என உறுதியாக தெரிவித்தார். இதனால் மீண்டும் இணைப்பிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டது. மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகளும் அவருடன் ஆதரவாக இருந்தவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் திமுகவிற்கு ஒருவர் பின் ஒருவர் பல்டி அடித்து வருகிறார்கள். ஏற்கனவே ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து 4 முறை எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கமும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இன்று காலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த வைத்திலிங்கத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்று அழைத்து சென்றார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
யார் இந்த வைத்திலிங்கம்.?
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் வைத்திலிங்கம், தஞ்சை மாவட்டம் முகமாகவே வைத்திலிங்கம் அடையாளம் காணப்பட்டார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 2001-2006 காலகட்டத்தில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும்,
2011-2016 காலகட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2016 தேர்தலில் தோல்வியுற்ற பிறகு, மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒரத்தநாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.