கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர், மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். ஜகபர் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடியில் வசித்து வரும் நிலையில, இவர் மட்டும் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் அருகே தனியாக வசித்து வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் தொழுகை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது எதிரே வந்த மினி லாரி, இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஜகபர் அலி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ஜகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஜகபர் அலியின் மனைவி மரியம், திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், திருமயம் அருகே கல் குவாரி என்ற பெயரில் சிலர், கனிம வளத்தை சுரண்டி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதை தடுக்கும் வகையில், தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த கல் குவாரி உரிமையாளர்கள், லாரியை ஏற்றி கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து விடுவதாக ஜகபர் அலிக்கு மிரட்டல் விடுத்ததாக, அவரின் மனைவி கூறியுள்ளார். அதை பொருட்படுத்தாமல் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஜகபர் அலி தொடர்ந்து போராடி வந்ததாக தனது புகாரில் மரியம் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ஜெபகர் அலி இறப்புக்கு நீதி வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.