திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை 4 நிறங்களாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் திமுக, தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் தொகுதிகளை நிறங்கள் வாரியாக பிரித்து, வாக்குகளை அதிகரிக்கும் புதிய வியூகத்தை கையில் எடுத்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை 10 மாதங்களுக்கு முன்பே திமுக தொடங்கி அதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக தொகுதிகளை மண்டல வாரியாக பிரித்து அவற்றுக்கு அமைச்சர்கள், எம்பி எம்எல்ஏக்களை பொறுப்பாளர்களாக திமுக தலைமை அறிவித்தது. மீண்டும் ஆட்சியமைப்பது மட்டுமின்றி 200க்கும் அதிகமான தொகுதிகளை கைபற்றுவதற்காக, “வெல்வோம் 200, படைப்போம் வரலாறு” என்ற திட்டத்தையும் திமுக தலைமை செயல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தொகுதிகளை தங்களின் முந்தைய வெற்றி தோல்விகளின் அடிப்படையில் 4 நிறங்களாக திமுக பிரித்து புதிய வியூகம் வகுத்துள்ளது. அதன்படி சிவப்பு, ஆரஞ்சு, இளம் பச்சை, அடர் பச்சை என 4 நிறங்களாக தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை திமுக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள், உட்கட்சி பிரச்சனை, தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகள் சிவப்பு நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடுமையான போட்டி இருக்கும் தொகுதிகள், கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டிய தொகுதிகள் ஆரஞ்சு நிறத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வெற்றி பெரும் தொகுதிகள் இளம் பச்சை நிறத்தின் கீழும், நிச்சயம் வெற்றி பெரும் தொகுதிகள் அடர் பச்சை நிறத்தின் கீழும் கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில் கட்சி நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் “ஒன் டு ஒன்” முறையில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 14ம் தேதி இந்த ஆலோசனை தொடங்கியது. அன்றைய தினம் சிதம்பரம், உசிலம்பட்டி, விழுப்புரம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். கடந்த 16ம் தேதி நடந்த ஆலோசனையில் பரமத்திவேலூர், பரமக்குடி, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக 5 முதல் 7 நிமிடங்கள் வரை பேசிய முதலமைச்சர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்படவும் அறிவுரை வழங்கினார்.
தற்போது சிவப்பு நிறத்தின் கீழ் வரும் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்து வரும் நிலையில் அடுத்தடுத்து ஆரஞ்ச், இளம் பச்சை , அடர் பச்சை என ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்பதை அறிந்து திமுக தனது முழு பலத்தை செலுத்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுவதாக பத்திரிகையாளர் ஷபீர் அகமது கூறினார். திமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சிகள் நிற்கும் தொகுதிகளையும் கருத்தில் கொண்டு இந்த பணியில் திமுக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.